சிதலமடைந்த 1000 வருட பெருமாள் கோயில்
பெயர்ந்து விழுந்த கலைநயமிக்க கட்டிடங்கள்
இந்த நாளில் இந்த பரிகாரம் செய்தால் பலன் நிச்சயம்.
ஆதி கேசவ பெருமாள் கோயிலின் சிறப்புகள்
1000 வருடங்கள் பழமையானது
திருவண்ணாமலையிலிருந்து மணலூர்பேட்டை செல்லும் சாலையில் திருவண்ணாமலையிலிருந்து 5வது கிலோ மீட்டரில் உள்ளது ஸ்ரீ தேவி ஸ்ரீ பூமாதேவி சமேத ஸ்ரீஆதி கேசவ பெருமாள் கோயில். இக்கோயில் 1000 வருடங்கள் பழமையானதாகும்.
சோழர் காலத்தில் கட்டப்பட்டுள்ள இக்கோயிலின் கருவறை கோபுரம் தஞ்சை பெரிய கோயில் கருவறை போன்று கோயில் கோபுரத்தின் உள்கூடு அமைப்பையே கருவறையாக அமைக்கப்பட்டிப்பது சிறப்பானதாகும். கோபுரத்தில் தசாவதார காட்சிகள் இடம் பெற்றிருப்பது வியக்க வைக்கிறது. கோயில் சுவர்களில் கலைநயமிக்க பல சிற்பங்கள் இடம் பெற்றிருக்கலாம் என்றும், காலப்போக்கில் அவை இடிந்து விழுந்து விட்டதாகவும், மடப்பள்ளியும் இடிந்து விட்டதாகவும் கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஆதி கேசவ பெருமாள் கோயில் பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. நாடி ஜோதிடத்தில் பரிகாரம் வந்ததாக கூறி நிறைய பக்தர்கள் வந்து பரிகாரம் செய்து சென்றுள்ளார்கள். திருவோண நட்சத்திரம் அன்று திருமண தடை நீங்க வேண்டி ஆண்களும், பெண்களும் பெருமாளுக்கு திருமண சேவை செய்து அவர் கழுத்தில் உள்ள மாலையை அணிந்து வலம் வந்தால் அவர்களுக்கு உடனே திருமணம் நடைபெறுகிறது.
புத்திர பாக்கியம்-சுகப்பிரசவம்
இதே போல் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் ரோகினி நட்சத்திரத்தில் வருகை தந்து பெருமாளுக்கு தேன் அபிஷேகம் செய்து வெண்ணையை நெய்வேத்தியமாக படைத்து தேனையும், வெண்ணையையும் சாப்பிட்டு புத்திர பாக்கியம் அடைந்துள்ளார்கள்.
ஏகாதசி நன்னாளில் சுகப்பிரசவம் வேண்டி கர்ப்பிணி பெண்கள் திருக்கோயில் வருகை தந்து தீர்த்தம் பெற்று செல்வதும் நடைமுறையில் உள்ளது. இவ்வளவு பெருமை வாய்ந்த இத்திருக்கோயில் கால சீற்றத்தில் சிதைந்துள்ளது. தற்போது பாலாலயம் செய்யப்பட்டு புனர் ருத்ராயன மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டு தற்காலிக கருவறையில் வைத்து பூஜை செய்து வருகின்றனர்.
மார்கழி மாதத்திலும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த மாதத்தில் ஆதி கேசவ பெருமாளிடம் வேண்டிக் கொள்பவர்கள், நினைத்தது நடந்ததாக கூறுகின்றனர்.
திருப்பணி கமிட்டி அமைப்பு
தற்பொழுது உள்ள திருக்கோயில் கட்டுமானங்கள் 400 ஆண்டுகள் பழமையானவை. புதியதாக கோயில் கட்டுவதற்கு திருப்பணி கமிட்டி அமைக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த கோயியில் இதுவரை 1000-த்துக்கும் மேற்பட்டோர் பரிகாரம் செய்து விட்டு சென்றிருக்கின்றனர். அவர்கள் வேண்டிய பலன் கிடைத்ததாக கூறுகின்றனர் என்பதை நம்மிடம் பதிவு செய்தார் ஆலய நிர்வாகி சிவபாபு.
தென்வைணவ திருத்தலம் என போற்றப்படும் ஆதிதிருவரங்கத்திற்கு செல்லக்கூடிய வழியில் திருவண்ணாமலையிலிருந்து 5 கிலோ மீட்டரில் மணலூர்பேட்டை ரோட்டில் கீழ்கச்சிராப்பட்டு என்ற கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
தொடர்புக்கு…
சிவபாபு, ஆலய நிர்வாகி, செல்-9443913329