திருவண்ணாமலைக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமியை, ஓபிஎஸ்சின் ஆதரவு முன்னாள் அமைச்சர் பூங்கொடுத்து வரவேற்றார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடந்த ஸ்ரீபத்மாவதி தாயார் வெங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேக விழாவில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று கலந்து கொண்டார்.
முன்னதாக திருவண்ணாமலை மாவட்ட எல்லையான காட்டாம்பூண்டியில் அதிமுகவினர் திரண்டு பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து கட்சி கொடியினை எடப்பாடி கே.பழனிச்சாமி ஏற்றி வைத்து பேசுகையில் திமுக¸ தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்து எடுத்துரைத்தார். முதியோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை படிப்படியாக குறைத்து வருகின்றனர். இதனை கண்டித்து முதியோர்களை ஒன்றுதிரட்டி அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.
பிறகு திருவண்ணாமலைக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு அண்ணாமலையார் கோயில் 16 கால் மண்டபம் முன்பு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் டிஸ்கோ எஸ்.குணசேகரன் 4.5 கிலோ வெள்ளி வெங்கடாஜல பெருமாள் திருவுருவ சிலையை நினைவு பரிசாக வழங்கினார். மேடையில் எடப்பாடி கே.பழனிச்சாமியுடன் செல்பி எடுக்க அதிமுகவினர் அதிகம் ஆர்வம் காட்டினர். இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில் எடப்பாடி கே.பழனிச்சாமி ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் நோட்டீஸ் ஒட்டி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்ட அதிமுகவினர் எடப்பாடிக்கே ஆதரவு என்பதை நிரூபிக்கும் வண்ணம் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். கழக பொதுச் செயலாளர் அவர்களே வருக!வருக!!¸ ஒற்றைத் தலைமையின் நாயகரே வருக!வருக!!¸ எங்களின் ஒற்றைத் தலைமையே வருக!வருக!! போன்ற பேனர்கள் எடப்பாடி பழனிச்சாமி வரும் வழியில் வைக்கப்பட்டிருந்தன. இந்த பேனர்களில் ஓ.பன்னீர்செல்வம் படம் இடம் பெறவில்லை.
வரவேற்பு நிகழ்ச்சியில் தொண்டர்கள், வருங்கால அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என கோஷம் எழுப்பிக்கொண்டே இருந்தனர். காட்டாம்பூண்டி மற்றும் திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது சம்மந்தமாக திருவண்ணாமலை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன்¸ முன்னாள் எம்.எல்.ஏ ஏ.கே.அரங்கநாதன் ஆகியோர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன்¸ முன்னாள் எம்.எல்.ஏ ஏ.கே.அரங்கநாதன்¸ பேரவை மாவட்ட தலைவர் ஏ.கே.இளவழகன் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் சென்று எடப்பாடி பழனிச்சாமியை பூங்கொத்து கொடுத்து சந்தித்தனர். காட்டாம்பூண்டிக்கு முன்னதாக அவர்கள் ஒன்று கூடி எடப்பாடியை வரவேற்றனர். ஆனால் தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்ச்சிகளில் அவர்கள் கலந்து கொள்ளவில்லை .
கடந்த 1 வருடத்திற்கு முன்பே முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரனும்¸ முன்னாள் எம்.எல்.ஏ ஏ.கே.அரங்கநாதனும் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு வந்து விட்டதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் யாரும் ஓபிஎஸ் ஆதரவாளர்களாக இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.