புரட்டாசி பவுர்ணமி அன்று திருநங்கைகள் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சமூக நலத்துறை அலுவலர்கள் திருநங்கைகளை அழைத்து அறிவுரைக் கூட்டம் நடத்திடவும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
புரட்டாசி மாத பவுர்ணமி வருகிற 17ந் தேதி காலை 11-27 மணிக்கு ஆரம்பித்து மறுநாள் 18ந் தேதி காலை 9-10 மணிக்கு நிறைவடைகிறது. இதையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அரசுத் துறை அலுவலர்களுடான ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.
பக்தர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள், போக்குவரத்தை சீரமைத்தல், தற்காலிக பேருந்து நிலையம் அமைத்தல், தேவையான போக்குவரத்து வசதி ஏற்படுத்துதல். 14 கிலோ மீட்டர் கிரிவலப்பாதையை தூய்மைப்படுத்துதல், கோயிலில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்துதல், முறையான வரிசையில் செல்ல ஏற்பாடு செய்தல், கழிவறை வசதிகள் மற்றும் தேவையான குடிநீர் வசதிகள் ஏற்படுத்துதல் ஆகியவை குறித்து மாநகராட்சி, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய்த்துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் ஆலோசனை வழங்கினார்.
மேலும் கிரிவலப்பாதை மற்றும் கோயில் உட்புரத்தில் மருத்துவ முகாம் அமைத்திடவும், தேவையான இடங்களில் 108 அவசரகால ஊர்தியினை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமெனவும் சுகாதார துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். காவல்துறை சார்பாக போதிய அளவிலான காவலர்களை நியமனம் செய்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ள ஆலோசனை வழங்கினார். தீயணைப்புத்துறை சார்பாக தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைத்திருக்கவும் உத்தரவிட்டார்.
கிரிவலப்பாதையில் கடை ஆக்கிரமிப்புகளை தவிர்க்க அனைத்து அரசு துறைகளின் சார்பாக ஒருங்கிணைப்பு அலுவலர்களை நியமிப்பது குறித்தும் பாதுகாப்பற்ற குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை செய்வதை உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மூலமாக கண்காணித்து தடுப்பது குறித்தும் திருநங்கைகள் திருக்கோயில் மற்றும் கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.
இது சம்மந்தமாக சமூக நலத்துறை அலுவலர்கள் திருநங்கைகளுக்கு அறிவுரைக்கூட்டம் நடத்தி தெரிவிக்க வேண்டும் எனவும், குழந்தைகளை வைத்து யாசகம் பெறும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், யாசகம் பெறும் முதியோர்கள் மற்றும் உடல்நலன் பாதிக்கபட்டவர்களை விசாரித்து காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக நலத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், கோட்டாட்சியர் மந்தாகினி, மாநகராட்சி ஆணையர் காந்திராஜ், அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் சி.ஜோதி, மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.