திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு
தலைவலியை ஏற்படுத்திய தேசிய கட்சிகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையில் நடைபெற்ற ஊழல் கலெக்டருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பா.ஜ.க எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த விஷயத்தில் கலெக்டர் வாய்மூடி மவுனமாக இருப்பது ஏன்? என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைவருக்கும் வீடு திட்டம்¸ தனிநபர் கழிவறை¸ மகாத்மாகாந்தி வேலைவாய்ப்பு திட்டம்¸ ஜல் சக்தி அபியான் திட்டம்¸ பிரதம மந்திரியின் கிராம சாலைகள் இணைப்புத்திட்டம்¸ தூய்மை பாரத திட்டம் போன்ற திட்டங்களில் முறைகேடு நடந்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட செயற்குழுவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன்¸ விவசாயிகளே பதிவு செய்யலாம் என மத்திய அரசு சொன்னதால்தான் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் முறைகேடு நடத்திருப்பதாக கூறி இந்த பிரச்சனையை தமிழக முதல்வர் தட்டிக் கழிக்க கூடாது. நடைபெற்ற ஊழல் குறித்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் முறைகேடு குறித்து தமிழகத்தில் 34 அதிகாரிகள் மீது துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் சொல்லியிருக்கிற நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? என பா.ஜ.க கேள்வி எழுப்பியுள்ளது.
இந்நிலையில் திருவண்ணாமலை அடுத்த ஆண்டாப்பட்டு கிராமத்தில் தனது சம்மந்தி மருமகனின் காரிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு திரும்பிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி திருவண்ணாமலை ஹிமாலயா ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அவரும் தன் பங்குக்கு மாவட்ட நிர்வாகத்தை வறுத்தெடுத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் வீடுகட்டும் திட்டத்தில் ஊழல் நடந்திருப்பது குறித்த ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் விஷ்ணுபிரசாத் ஆதாரங்களுடன் கூறியிருக்கிறார். அவர் குற்றச்சாட்டு சொல்லி 48 மணி நேரமாகியும் இதுபற்றி முதல்வரோ சம்பந்தப்பட்ட உள்ளாட்சி துறை அமைச்சரோ மாவட்ட ஆட்சியரோ பதிலளிக்காமல் உள்ளனர். இது ஒதுக்கி வைக்க கூடிய பிரச்சனை இல்லை. குற்றவாளிகள் கும்பலாக சேர்ந்து செய்த தவறை எம்.பி கண்டுபிடித்துள்ளார். அரசியலுக்கு அப்பாற்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரும் ஏன் பதில் அளிக்காமல் உள்ளார். மடியில் கனம் இல்லையென்றால் வழியில் பயம் எதற்கு? என்றார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்றுள்ள ஊழல்களை இரண்டு தேசிய கட்சிகளும் கிளறி வருவது மாவட்ட ஆட்சியருக்கு தலைவலியை உருவாக்கியுள்ளது.