செயல்படுத்தி வந்த நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை கலைப்பு
பணியாளர்கள் வேலையின்றி தவிப்பு
தமிழகமெங்கும் பிரதமரின் விவசாய நீர்பாசன திட்டத்தை செயல்படுத்தி வந்த நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை திடீரென கலைக்கப்பட்டு 273 பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வேளாண்மைத்துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரியின் விவசாய நீர்பாசன திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மை திட்டங்களில் 273 நீர்வடிப்பகுதி அணி உறுப்பினர்கள் தற்காலிக பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். நீர் மற்றும் நில வளம் பெருக்குதல்¸ மானாவரி உற்பத்தியை பெறுக்குதல்¸ பண்ணை உற்பத்தி மேம்பாடு¸ சுயஉதவிக்குழுக்களின் மேம்பாடு போன்ற பணிகளை இவர்கள் மேற்கொண்டு வந்தனர்.
1996 ஆம் ஆண்டு முதல் 23 ஆண்டுகளாக பணியாற்றும் இவர்களுக்கு ஆரம்பத்தில் ரூ.3ஆயிரம் ஊதியம் வழங்கப்பட்டது. தற்போது படிப்புக்கு ஏற்ற வகையில் ரூ.8ஆயிரத்திலிருந்து 15ஆயிரம் வரை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை கலைக்கப்பட்டு இவர்கள் அனைவரும் கடந்த மாதம் 31ந் தேதி முதல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டதாக கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள அவர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது சம்மந்தமாக திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த நீர்வடிப்பகுதி அணி உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இது குறித்து நீர்வடிப்பகுதி அணி உறுப்பினர் டி.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில் கொரோனா நேரத்தில் குடும்பத்தின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நாங்கள் வேலையிழந்து என்ன செய்துவது என தெரியாமல் தவித்து வருகிறோம். 2020-2021 ம் ஆண்டு நிதியாண்டில் நீர்வடிப்பகுதி மேம்பாட்டுக்கு மாவட்டம் தோறும் 150 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ள நிலையில் அரசு மீண்டும் எங்களுக்கு வேலை வழங்க வேண்டும்¸ இல்லையெனில் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் பணியமர்த்த வேண்டும் என்றார்.
வேளாண்மைத்துறை வட்டாரத்தில் விசாரித்ததில் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை கலைக்கப்பட்டு அதில் பணியாற்றி வந்த துணை இயக்குநர்¸ உதவி இயக்குநர்¸ உதவி பொறியாளர் போன்றோர் வேளாண் பொறியியல் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இனி இத்துறை மூலம் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்கின்றனர்.
திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியை அளித்தாலும் திடீரென நட்டாற்றில் விடப்பட்ட ஊழியர்களின் நிலை பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.