திருவண்ணாமலையில் தொண்டர்கள்¸ பொதுமக்களின் பசியாற்றிய அம்மா இல்லம் இடித்து தள்ளப்பட்டதை கண்டித்து 2 பேர் தீக்குளிக்க முயன்றனர்.
ஜெயலலிதாவால் நேர்காணல் நடத்தப்பட்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளராக நியமிக்கப்பட்டவர் பெருமாள்நகர் ராஜன். திருவண்ணாமலை சட்டமன்ற தேர்தலில் எ.வ.வேலுவை எதிர்த்து நிற்க இவருக்கு சீட் தந்தார் ஜெயலலிதா. ஆனால் இத்தேர்தலில் தோல்வியை தழுவினார் பெருமாள்நகர் ராஜன். ஆனாலும் திமுகவை எதிர்த்து தீவிர அரசியல் செய்து வந்தார்.
தினமும் உணவு
திருவண்ணாமலை – போளுர் ரோட்டில் அம்மா இல்லம் என்ற பெயரில் அலுவலகம் அமைத்து நிர்வாகிகளுக்கு தினமும் சாப்பாடு¸ விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கானோருக்கு 3 வேலையும் சாப்பாடு¸ வேட்டி¸ சேலை¸ பரிசுத் தொகை கொடுத்து அசத்தினார். மேலும் இலவச கணினி¸ தையற் பயிற்சி¸ ஜெராக்ஸ் போன்றவற்றையும் ஏற்படுத்தினார். இதனால் அவருக்கு கட்சியினர் மத்தியில் செல்வாக்கு கூடியது.
இந்நிலையில் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த சேவூர் ராமச்சந்திரனோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு¸ பெருமாள்நகர் ராஜனின் மாவட்ட செயலாளர் பதவிக்கு வேட்டு வைத்தது. மாவட்ட செயலாளர் பதவியை இழந்தாலும்¸ அவருக்கு திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.
வேலி அமைத்து மூடல்
இந்நிலையில் அம்மா இல்லம் செயல்பட்டு வந்த இடம் விற்பனை செய்யப்பட்டு அதிமுக நிர்வாகி சஞ்சீவி ராமன் என்பவருக்கு சொந்தமானது. இதையடுத்து இடத்தை காலி செய்ய அழுத்தம் தரப்படவே பெருமாள் நகர் ராஜன் கோர்ட்டு படி ஏறினார். கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. ரூ.1 கோடி மதிப்பிலான தனது இடத்தை பெருமாள் நகர் ராஜன் அபகரித்து விட்டதாக டிஜிபி அலுவலகத்தல் சஞ்சீவி ராமன் புகார் அளித்திருந்தார். இதற்கிடையே திமுக ஆட்சி வந்ததும் அம்மா இல்லத்திற்கு முன்புறம் காலியாக இருந்த புறம்போக்கு இடத்தில் வேலி அமைக்கப்பட்டது. அலுவலகத்திற்கு செல்ல மட்டும் ஒரு சிறிய வழி ஒதுக்கித் தரப்பட்டது.
சிறை பிடிப்பு
இந்நிலையில் தனது மகளை பார்ப்பதற்காக பெருமாள்நகர் ராஜன்¸ ஆஸ்திரேலியாவுக்கு சென்றார். இதை பயன்படுத்திக் கொண்ட சஞ்சீவி ராமன்¸ இன்று அதிகாலை ஆட்களை அழைத்துச் சென்று ஜே.சி.பி இயந்திரங்களின் துணையோடு அம்மா இல்லத்தை இடிதது நொறுக்கினார். தகவல் கிடைத்ததும் அங்கு குவிந்த பெருமாள்நகர் ராஜனின் ஆதரவாளர்கள்¸ 2 ஜே.சி.பி இயந்திரங்களையும்¸ ஒரு லாரியையும் சிறை பிடித்தனர். பிறகு போலீசார் வந்து பேச்சு வார்த்தை நடத்தி அந்த வாகனங்களை போலீஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.
அம்மா இல்லத்தை இடித்து நொறுக்கியவர்களை கைது செய்யக் கோரி பெருமாள் நகர் ராஜனின் ஆதரவாளர்கள் திருவண்ணாமலை- போளுர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் காம்பட்டு மு.பலராமன்¸ திருவண்ணாமலையை சேர்ந்த குட்டி ஆகியோர் தங்களது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. அப்போது அருகில் இருந்தவர்கள் தடுத்து அவர்களை சமாதானப்படுத்தினர்.
100 பேர் மீது வழக்கு
இச்சம்பவம் குறித்து பெருமாள்நகர் ராஜனின் உதவியாளர் கலைச்செல்வன் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சஞ்சீவி ராமன் உள்பட 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 100 கணினி¸ 100 மடிகணினி¸ 200 சுழல் நாற்காலிகள்¸ 60 டேபிள்¸ 15 பிரிண்டர்¸ 20 யுபிஎஸ்¸ 4 ஜெராக்ஸ் மிஷின்¸ 3 ஏசி¸ 20 சிசிடிவி¸ 6 டிவி¸ 60 பேன்¸ 150 தையல்மிஷின்¸ 50 டேபிள்¸ 1850 சேர்¸ ரூ.6 லட்சம் மதிப்புள்ள சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் அம்மா இல்லத்தில் இருந்ததாக கலைச்செல்வன் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.