Homeசெய்திகள்இளவயது பட்டதாரி பெண் பஞ்சாயத்து தலைவர் ராஜினாமா

இளவயது பட்டதாரி பெண் பஞ்சாயத்து தலைவர் ராஜினாமா

இளவயது பட்டதாரி பெண் பஞ்சாயத்து தலைவர் ராஜினாமா

22 வயதில் மேல் வில்வராயநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவராக பதவியேற்ற பட்டதாரி பெண் அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே அமைந்துள்ளது மேல் வில்வராயநல்லூர். இந்த ஊராட்சியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் அதிமுக ஒன்றிய செயலாளராக உள்ள பொய்யாமொழியின் மகள் நிலவழகி போட்டியிட்டு 1075 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இன்னும் திருமணமாகவில்லை. 

பி.இ படித்துள்ள இவர் தனது 22வது வயதில் ஊராட்சி மன்றத் தலைவராக பதவியேற்றார். தமிழ்நாட்டில் இளவயது ஊராட்சி மன்றத் தலைவரானவர்களில் ஒருவர் என்ற பெருமையை பெற்ற நிலவழகி¸ தனது ஊராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என தெரிவித்திருந்தார். 

அதன்படி சாலை¸ குடிநீர்¸ கால்வாய் வசதிகளை செய்து தந்ததோடு மேல் வில்வராயநல்லூர் அரசு பள்ளியில் ரூ.10 லட்சத்தில் கலையரங்கத்தையும் கட்டித் தந்தார். கொரோனா காலத்தில் சிக்னல் கிடைக்காத காரணத்தால் மாணவ-மாணவியர்கள் ஆன்லைனில் வகுப்புகளில் பங்கேற்காமல் அவதிப்பட்டனர். இதையடுத்து மாணவ-மாணவியர்களை தனது வீட்டிற்கே அழைத்து பாடம் நடத்தி அவர்களது கல்வித் தரம் உயர வழிவகுத்தார். இதனால் கிராம மக்களின் பாராட்டை பெற்றார். மேலும் ஒவ்வொரு வருடமும் பொங்கல் விழாவை நடத்தி ஊருக்கே அன்னதானம் வழங்கினார். 

இப்படி அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்றிருந்த நிலவழகி தனது ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை இன்று திடீரென ராஜினாமா செய்தார். கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு இன்று வந்த நிலவழகி¸ கிராம ஊராட்சிகளின் வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜுலுவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். அப்போது அவரது தந்தையும்¸ ஒன்றிய செயலாளருமான பொய்யாமொழி உடனிருந்தார். 

இளவயது பட்டதாரி பெண் பஞ்சாயத்து தலைவர் ராஜினாமா

சென்னையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரி பதவி கிடைத்திருப்பதால் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக தெரிவித்த நிலவழகி¸ ஊராட்சி மன்றத் தலைவராக இல்லாவிட்டாலும் தன்னால் முடிந்த உதவிகளை கிராம மக்களுக்கு செய்வேன் என கூறினார். 

பதவியேற்ற இரண்டரை வருட காலத்தில் கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 45 ஊராட்சி மன்ற தலைவர்களில் சிறப்பாக பணி செய்தவர் என்ற பெயரினை பெற்றிருந்த நிலவழகி¸ தலைவர் பதவியை ராஜினாமா செய்தததை கேள்விப்பட்டு மேல் வில்வராயநல்லூர் மக்கள் சோகத்தில் ஆழ்ந்தாலும்¸ வங்கி அதிகாரி பணி கிடைத்தற்காக நிலவழகிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதே போல் உள்ளாட்சி பிரதிநிதிகளும் வாழ்த்து தெரிவித்தனர்.

நிலவழகி,ராஜினாமா செய்ததின் மூலம் காலியாக உள்ள மேல் வில்வராயநல்லூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறும் வரை துணைத் தலைவர்¸ தலைவர் பதவியை கவனிப்பார் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

See also  லஞ்ச ஒழிப்பு போலீசிடம் சிக்கிய இபி போர்மேன்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!